வெற்றிக்கு வழி
நாம் எதிலும் வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் நம்மிடம் காணப்படவேண்டியது மன ஒருமையாகும். அதற்கு நம்மிடம் அவ்விடயத்தில் ஆர்வம் இருக்கவேண்டும். சகல விடயங்களும் நமக்குப்பிடித்தவையாக இருப்பதில்லை. ஆனாலும் செய்துதான் ஆக வேண்டும். தீர்வு என்ன? பிடிக்காததையும் பிடித்தவைகளாக மாற்றிக்கொள்வதுதான்.
பாடசாலை மாணவர்களைப்பாருங்கள்! அவர்களில் பலருக்கு படிப்பில் தான் தங்களின் கவனத்தைக் குவிக்க முடிவதில்லை. அதற்கு காரணம் என்ன? அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி முறைமை அவர்களுக்கு விருப்பமானதாய் இல்லாதிருப்பதுதான். அதில் கவனம் செலுத்த முடியாத மாணவர்கள் விளையாட்டு என்றால் தங்களையே மறந்து விடுவர். அவர்களின் மனம் முழுவதும் விளையாட்டை ஆக்கிரமித்து விடுகிறது. உடல் உறுப்புக்களும் தசை நார்களும் முறுக்கேறி விடுகின்றன. விளையாட்டுடன் அவர்கள் அப்படியே ஒன்றித்து விடுகிறார்கள்.
படிப்பில் கவனம் குவிவதில்லை. விளையாட்டில் கவனம் குவிகிறது. அவர்களுக்கு கல்வி பயிற்ற சிறந்த வழி எதுவெனில் அவர்களுக்குப் பிடித்தமானதை பயிற்றுவதும் பயிற்றப்படும் விடயத்தில் அவர்களை விருப்பங்கொள்ளச்செய்வதும் தான். இம் முறையே ரசியா போன்ற நாடுகளில் பின்பற்றப்பட்டு மக்களை மேன்மக்களாக்குகின்றனர்.
சிறுவனின் விருப்பம் எதில் உள்ளது என்பதைக் கண்டு கொண்டு அதுக்கேற்ற கல்வியை வழங்குகின்றனர். எனவேதான் கோள்களில் கூட கால் வைக்கும் அறிவியல் அறிஞர்கள் அங்கு உருவாகின்றனர். அவர்கள் விரும்பும் கல்வியைப்போதித்ததால் அடைந்த பெரும் பலன் இதுவாகும்.
எனவேதான் அறிஞர் ஒருவர் "ஆசிரியர்களின் வேலை மாணவர்களுக்கு பயிற்றுவிப்பது அல்ல. படிப்பில் பிரியம் உண்டாக்குவதேயாகும்" என்றார்.
சிலருக்கு படிப்பில் பிரியம் இல்லை. எந்த நேரம் பார்த்தாலும் ஓவியம் தீட்டுவதில் மூழ்கியிருப்பர். இவர்கள் தேர்வில் எப்போதும் தோல்வியடைவர். ஆனால் அவர்கள் ஓவியத்துறைக்கு திரும்பிவிட்டாலோ அவர்கள் ஒப்பாரும் மிக்காரும் இன்றி வெற்றிவாகை சூடுவர். காரணம் அவர்களுக்கு படிப்பில் பிரியமில்லை. அதனால் மனம் குவிவதில்லை. படம் தீட்டவேண்டும் என மனம் விரும்புகிறது. அதில் முழுதாய் ஈடுபடுகின்றனர்.
எனவே நாம் முதலில் செய்யவேண்டியது மனத்தை விரும்பிய ஒன்றில் செலுத்தவேண்டும். மனத்தை செலுத்தவேண்டிய விடயத்தை விரும்பவேண்டும். அப்போதே வெற்றி கிடைக்கும்.
நன்றி : அப்துற் றஹீம்(நூலாசிரியர்)


0 comments:
Post a Comment