Sunday, March 9, 2014

தடைதாண்டி முன்னேறு

தடைதாண்டி முன்னேறு


ஒரு ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கு சாதிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது. இதனால் அவன் பல வழிகளிலும் சாதித்து வந்தான். அவனது ஆவலும் தீராத வெற்றிப்பசியும் அவனுக்கு மேலும் வழிகளைத் திறந்துவிட்டது. 

ஆனாலும் அவனிடம் ஒரு குறை இருந்தது. அவன் எச்செயலில் இறங்கினாலும் யாராவது அவனை கிண்டல் செய்தால் அல்லது குறை சொன்னால் அவன் இடையில் அச்செயலை கைவிடுவான். இது அவனி்ன் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக தோன்றியது. 

ஒரு முறை அவனது ஊருக்கு ஒரு பெரியார் வந்திருந்தார். இவன் அப்பெரியாரைச்சந்தித்தான். தன்னை அறிமுகம் செய்து தனது பிரச்சினைகளை எடுத்துக்கூறினான். அப்பெரியார் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சிறிது நேரம் சிந்தித்தார். பிறகு ஒரு கேள்வி கேட்டார். "நீ எருமையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது கழுதையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது குதிரையாக இருக்க விரும்புகிறாயா?" இளைஞனுக்கு தூக்கிவாரிப்போட்டது. 

"நீங்கள் என்னை கிண்டல் செய்கிறீர்களா?" என்று கேட்டான். அப்பெரியார் சிரித்தார். பிறகு கூறினார். "மகனே! எருமையானது எவரும் பின்னால் சென்று அதை தொந்தரவு செய்தால் அல்லது அடித்தால் என்ன செய்யும்? அதன் பாட்டில் இருக்கும். கழுதையானது அப்படி அடித்தவனை பின்னங்காலால் எட்டி உதைக்கும். ஆனால் குதிரையோ யாராவது அடித்தால் வீர முழக்கத்துடன் வேகமாக முன்னோக்கிப்பாய்ந்து செல்லும். இவற்றில் நீ எதை விரும்புகிறாய்?"

இப்போதுதான் இளைஞனுக்கு எல்லாம் புரிந்தது. "நான் எருமைபோல் ஒன்றும் விளங்காது வெறுமனே இருக்க விரும்பவில்லை. கழுதைபோல் மற்றவர்களை திருப்பி கிண்டல் செய்யவோ ஏசி நாட்களை வீணாக்கவோ விரும்பவில்லை. மற்றவரது கேலிகளையும் அவமானப்படுத்தல்களையும் எனக்கு கிடைத்த உத்வேகமாக பயன்படுத்தி குதிரைபோன்று வீர நடையுடன் என்றும் வெற்றியின் பாதையில் செல்வேன். இறைவன் உங்களுக்கு நற்நகூலி தருவானாக." என்று சொல்லி பெரியவர்க்கு நன்றி கூறி விடைபெற்றான்.

நன்றி: விடிவெள்ளிப்பத்திரிகையில் வெளியான ஒரு கதையின் தழுவல்.

0 comments:

Post a Comment

 
;