மேல் மாகாண சபை தேர்தலில், கம்பஹா மாவட்டத்தில், வத்தளை பிரதேசத்தில் வேலேயகொட பிரதேசத்தில் ஞாயிற்றுகிழமை (09) இரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். அமைச்சர் ஹக்கீம் அங்கு உரையாற்றும் பொழுது மேலும் தெரிவித்தவையாவன,
அரசாங்கத்தை விட்டு வெளியேற்றப்படும் சந்தர்ப்பத்தில், கிழக்கு மாகாண சபை ஆட்சியிலும் நாங்கள் நிலைத்திருக்க முடியாது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் அங்கு அரசாங்கத்திற்கு அளித்து வரும் ஆதரவை நாங்கள் விலக்கிக் கொள்ள நேரிடும். அவ்வாறானால் அங்கு ஆட்சியமைக்க முன்வருமாறு கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பை கிழக்கு மாகாண ஆளுநர் கோருவார், அவ்வாறான சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை கூட்டமைப்பினர்; கோரக்கூடும். அவ்வாறன்றி, பலத்தை நிரூபிக்க முடியாத பட்சத்தில் மாகாண சபையை ஆளுநர் கலைத்து விடலாம். அவ்வாறானால், நிலைமை என்னவாகும்? மீண்டும் தேர்தல் நடாத்த வேண்டி வரும்.
வட மாகாண சபை தேர்தலிலும் தோல்வியடைந்து, கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சியைப் பறிகொடுத்தால் அரசாங்கத்தின் நிலைமை என்ன? அவ்வாறான நிலைமையில் முடியுமானால் மாகாண சபையை கலைத்து விட்டு, தேர்தல் நடத்தி வெற்றி பெற்றுக் காட்டட்டும். முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பலம் எத்தகையது என அரசாங்கத்தில் இருக்கும் இனவாதக் கட்சிகளுக்குத் தெரிவதில்லை. அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும், அரசியல் நடத்தும் வல்லமை இறைவன் அருளால் முஸ்லிம் காங்கிரஸிக்கு இருக்கிறது. அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும், நாங்கள் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருப்போம். அதனை அனைவரும் நன்றாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
பிரேமதாசவை ஜனாதிபதி ஆக்கியவர்கள் நாங்கள். சந்திரிக்காவை ஜனாதிபதி ஆக்கியவர்களும் நாங்கள் தான். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி ஆவதானாலும் அதனை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டியவர்களாக இருப்போம். இனவாத, தீவிரவாதக் கும்பல்கள் கூச்சல் இடுகின்றன என்பதால் நாங்கள் அரசாங்கத்தை விட்டு வலிந்து வெளியேற வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால், அரசாங்கம் எங்களை வெளியேற்றட்டும். மத்திய அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் போது மாகாண சபைகளின் ஆட்சியிலும் தொடர்பை துண்டித்துக் கொள்ள நேரிடும். அதன் விளைவு என்னவாகும் என்பதை ஜனாதிபதியும், அரசாங்கமும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை பலவீனப்படுத்துவதற்கு எத்தனையோ சக்திகள் எத்தனித்துக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தை விட்டு எங்களை வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்காக அதிலுள்ள தீவிரவாத சக்திகள் எங்களை தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். அரசாங்கத்தை விட்டு நாங்களாகவே வெளியேறி விட வேண்டுமென எதிர்பார்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் என்றால் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றது.
நாங்கள் மிகவும் நாணயமாகவும், பக்குவமாவவும், நேர்மையாகவும் அந்த விமர்சனங்களை எதிர் கொண்டு வருகின்றோம். இந்த நாடு முழுவதிலும் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் தனக்குரிய தார்மீக பொறுப்பை தவறவிடாமல், முஸ்லிம்களைப் பற்றிய சரியான தகவல்களை அவை சென்றடைய வேண்டிய இடத்திற்கு சேர்ப்பிக்க வேண்டிய பாரிய பொறுப்பு இக்கட்சிக்கு இருக்கின்றது. சர்வதேச ரீதியான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற பிரேரணை ஜெனீவாவில் கொண்டு வரப்படும் சூழ்நிலையில் இந்த நாட்டை தலைகுனிய வைக்க வேண்டும் என்ற நோக்கம் முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கும் உடந்தையாக செயல்பட வில்லை.
ஆனால், நாட்டில் சட்டமும், ஒழுங்கும் நிலை நாட்டப்பட வேண்டும். இந்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும். என்ற காரணத்தினால் ஒரு சில விடயங்கள் பற்றியவற்றை எங்களது பார்வையில் கூறவேண்டிய கடமை இந்தக் கட்சிக்கு இருக்கின்றது. அதை சகித்துக் கொள்ள முடியாமல் சிலர் எங்களை தாறுமாறாக பேசுகிறார்கள். அரசாங்கத்திற்கு உள்ளே இருக்கின்ற தீவிரவாதக் கட்சிகள் இந்த நாட்டு முஸ்லிம்களை வந்தான் வரத்தான்களாகவும், ஒட்டுண்ணிகளாகவும், சுரண்டிப் பிழைக்கின்றவர்களாகவும் பார்க்கின்ற கேவலமான நிலையில் அவர்களை அரசாங்கம் அரவணைத்துக் கொண்டிருந்தாலும் அதனை நாங்கள் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. தாங்கள் தான் அரசாங்கத்திற்கு பலம் சேர்க்கிறோம் என அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால், அந்த தீவிரவாத சக்திகள் காரணமாக அரசாங்கத்தின் மீது முஸ்லிம்களும், சிறுபான்மைச் சமூகங்களும் கொண்டிருந்த நம்பிக்கை படிப்படியாக இழக்கப்படுகிறது. அரசாங்கத்தின் பலவீனமாக அந்த தீவிரவாத சக்திகளேயே நாங்கள் பார்க்கின்றோம்.
எனவே. அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதில் முக்கிய இடத்தை வகிப்பவர்கள் அந்த தீவிரவாத சக்திகள் தாம் என்பதை அரசாங்கம் இன்னும் உணராமல் இருக்கிறது. ஜனாதிபதி மிகவும் அனுபவம் வாய்ந்த பழுத்த அரசில்வாதி. இந்த தீவிரவாத சக்திகளின் போக்கு தமது அரசாங்கத்தின் பலம் என அவர் எண்ணிக் கொண்டிருப்பானால், அதைவிட பெரிய அரசியல் மடைமை வேறேதுவும் இருக்க முடியாது. அவர் இந்த தீவிரவாத சக்திகளின் பணயக் கைதிகளாக மாறிவிடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கையையும், அபாய அறிவிப்பையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் செய்ய வேண்டிய அவசியம் நாட்டின் நலன்கருதி மிகவும் நேர்மையாக சிந்திக்கும் எங்களுக்கு இருக்கின்றது. அவர்கள் வாய்க்கு வந்தவாறு முஸ்லிம் காங்கிரஸை திட்டித் தீர்ப்பது போல எங்களால் கீழ்தரமாக நடந்து கொள்ள முடியாது.
நேர்மையாகவும், பக்குவமாகவும் சில வேளைகளில் மௌனமாகவும் அவர்களது அசிங்கமான விமர்சனங்களை நாங்கள் பொறுமையோடு எதிர்கொள்கின்றோம். அவர்கள் வலிந்து வம்புக்கு இழுக்கின்ற பொழுது நாங்கள் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு போக முடியாது. அது எங்களது பார்வையில் அரசியல் முதிர்ச்சியான விடயமல்ல.
இன்று இந்த நாட்டின்; நீதியமைச்சராக இருக்கின்ற நான், வாய் திறந்தால் அதனால் ஏற்படும் தாக்கம் சாதாரணமானதல்ல. இப்பொழுது முஸ்லிம் காங்கிரஸை ஹெல உறுமய போன்றவை எவ்வாறு விமர்சிக்கின்றனவோ அவ்வாறு முஸ்லிம் காங்கிரஸையும் அரசாங்கத்தையும் விமர்சிப்பவர்தான் ஆஸாத்சாலி. அரசாங்கத்தை கூடுதலாக விமர்சிக்கப் போய் அவர் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த விதம் தவறானது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நான் பாதுகாப்புச் செயலாளருடன் வாதிட்டேன். அவரது பலம், பலவீனம் எப்படியாக இருந்தாலும் அரசாங்கத்தை அவர் விமர்சிக்கின்றார் என்பதற்காக பிழையாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய முடியாது என்ற மிகவும் திட்டவட்டமான நிலைப்பாட்டில் நான் இருந்தேன். சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று கூறப்படும் இந்த நாட்டில் ஆஸாத்சாலியின் கைதை நீதியமைச்சராக இருக்கின்ற நான் ஏற்றுக் கொள்ள முடியாது என்றேன். அதன் பயனாக நான் அதனை சுட்டிக்காட்டிய மறுநாளே அவர் விடுதலை செய்யப்பட்டு விட்டார். ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பரிதாபகரமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவர்கள் மத்தியில் அரவே ஒற்றுமை இல்லை. தலைமைத்துவப் பிரச்சினை காரணமாகவும், உட்பூசல் காரணமாகவும் அந்தக் கட்சி பலமிழந்து நிற்கிறது. அவர்களால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்றார்.
நன்றி: http://lankamuslim.org/
தமிழ்ப் புலிகளுக்கு எதிரான யுத்தம் 2009ல் வெற்றிகொள்ளப்பட்ட போது சிறிலங்காவானது பலம்பெற்ற, ஒற்றுமையான ஒரு நாடாக விளங்கும் என்ற நம்பிக்கை துளிர்த்திருந்தது. மூன்று பத்தாண்டுகளாக இடம்பெற்ற யுத்தத்தின் வடுக்கள் சிறிலங்கா என்கின்ற தேசத்தை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதித்தது. யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை சிறிலங்கா அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டது தொடர்பில் இதற்கு எதிராக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.
தமிழ்ப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக சிறிலங்காவைச் சேர்ந்த 150,000ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த யுத்தத்தின் விளைவாக 80,000 – 100,000 வரையான மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்த நாட்களில் மட்டும் 40,000 வரையான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
இவ்வாறான ஆழமான வடுக்கள் காணப்படுகின்ற அதேவேளையில், சிறிலங்காவில் வாழும் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கும் இடையில் மீளிணக்கப்பாட்டை கொண்டுவருவதற்கான ஆரம்ப முயற்சிகளில் இந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டது.
ஆனால் இவ்வாறான மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான சூழல் சிறிலங்காவில் காணப்படவில்லை என்பதை யுத்தத்தின் பின்னரான நிகழ்வுகள் சில எடுத்துக்காட்டின. சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்தும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பௌத்த சிங்கள சமூகத்தால் முஸ்லீம் மக்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகின்றனர். அத்துடன் முஸ்லீம் மக்கள் மீது பௌத்த சிங்களவர்கள் மேற்கொள்ளும் சில தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
சிறிலங்காவின் ஆழமான பொருளாதார மற்றும் சமூக மோதலை உருவாக்குவதற்காக சிறிலங்காவின் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ராஜபக்ச அரசாங்கம் துணைபோவதாக சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறான பௌத்த சிங்கள ஆதிக்கசக்திகளால் சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் நாட்டில் சமாதானம் மற்றும் இனஒற்றுமை போன்றவற்றை நிலைநிறுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான பௌத்த சிங்கள ஆதிக்கசக்திகளால் சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் நாட்டில் சமாதானம் மற்றும் இனஒற்றுமை போன்றவற்றை நிலைநிறுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா முழுவதிலும் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதில் Bodu Bala Sena என்கின்ற பௌத்த ஆதிக்க சக்தி முதன்மை இடத்தை வகிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவில் வாழும் முஸ்லீம்கள் பௌத்த மதத்திற்கும் பௌத்தர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய என்கின்ற அரசியற் கட்சியுடன் இணைந்து செயற்படும் Bodu Bala Sena என்கின்ற இப்பயங்கரவாதக் குழு அறிவித்துள்ளது. “எல்லா வாய்ப்புக்களையும் பயன்படுத்தி சிறிலங்காவில் பௌத்த மதத்தையும் அதன் மரபுகளையும் பலப்படுத்துவதுடன், இதனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக” இந்த அமைப்பு அறிவித்துள்ளது.
முஸ்லீம் மக்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உட்படுவதை உறுதிப்படுத்துவதே இந்த அமைப்பின் தெளிவான நோக்காகக் காணப்படுகிறது. எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 10 சதவீதத்தை அதாவது இரண்டு மில்லியன்களாக காணப்படும் முஸ்லீம்கள் கடந்த பல பத்தாண்டுகளாக தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவது என்கின்ற உண்மையை இவர்கள் மறந்துவிடக் கூடாது.
சிறிலங்காவின் முஸ்லீம் மக்கள் நாட்டின் இராணுவம், காவற்துறை போன்ற துறைகளில் மிக அரிதாகவே இணைக்கப்படும் அதேவேளையில், சிறிலங்கா அரச திணைக்களங்களிலும் ஏனைய அரச நிறுவகங்களிலும் பதவிகளில் அமர்த்தப்படுவதும் குறைவாகவே காணப்படுகின்றது. இவர்கள் இவ்வாறான வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதில் சமசந்தர்ப்பத்தை இழக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதேபோன்று சிறிலங்காவின் வர்த்தக மற்றும் வியாபாரத் துறைகள் உள்ளடங்கலான முதன்மையான பொருளாதார நடவடிக்கைகளில் முஸ்லீம் சமூகம் ஓரங்கட்டப்படுகின்றனர்.
சிறிலங்காவின் வடக்கில் யுத்தத்தில் பங்கெடுத்த இரு தரப்பினரதும் தாக்குதலுக்கு உட்பட்டு 130,000 வரையான முஸ்லீம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இன்று யுத்தம் முடிந்து மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட யுத்தத்தால் இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் இடம்பெயர்ந்தோர் முகாங்களில் வாழ்கின்றனர். முஸ்லீம் மக்களின் பிரச்சினைகளை முக்கியப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
இதேவேளையில், மத்திய மாகாணத்திலுள்ள கண்டியிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சிறிய நகரான புவெலிகட என்கின்ற இடத்தில் வாழும் முஸ்லீம் மக்கள் மீது அண்மையில் Bodu Bala Sena அமைப்பைச் சேர்ந்தவர்கள் வன்முறைகளை மேற்கொண்டுள்ளனர். இங்குள்ள முஸ்லீம்களில் பெரும்பாலானவர்கள் சிறிய கடைகளைக் கொண்டுள்ளனர்.
“பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த சிங்கள இளைஞர் குழு ஒன்று முஸ்லீம்கள் சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதாவது வான் ஒன்று வீதிக்கு தடையாக நிறுத்தப்பட்டதாக கூறியே இந்தச் சண்டை ஆரம்பித்தது. இந்த வன்முறைச் சம்பவத்தில் சில முஸ்லீம்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் சிறப்பு காவற்துறை அதிரடிப் பிரிவு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை” என இந்தச் சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சாட்சியக்காரர் ஒருவர் தெரிவித்தார்.
“சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூல பத்தொன்பது இணையத்தளங்களின் ஊடாக இஸ்லாம் மற்றும் முஸ்லீம் தொடர்பாக அவதூறு பரப்பப்பட்டுள்ளது. இதனை மிகச் சிறிய ஆனால் நன்றாக திட்டமிட்டு நிர்வகிக்கப்படும் சிங்கள குழு ஒன்றே மேற்கொண்டுள்ளது” என முஸ்லீம்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அனுராதபுரத்தில் 400 ஆண்டு காலப் பழமை வாய்ந்த முஸ்லீம் புனித தலம் ஒன்று அண்மையில் அழிக்கப்பட்டமை மற்றும் இதனைத் தொடர்ந்து தம்புள்ள புனித பள்ளிவாசல் மீது இப்பகுதியில் பொறுப்பாகவுள்ள புத்த பிக்குவின் தலைமையில் பௌத்த காடையர்கள் தாக்குதல் மேற்கொண்டமை போன்றவற்றை முஸ்லீம்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சில பள்ளிவாசல்கள் மீதும் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இந்த விடயத்தில் தொடர்புபட்ட அதிகாரிகள் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர்.
நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்களை அழித்து நாட்டை கொலைக்களங்களாக மாற்றும் சில பௌத்த சிங்கள பயங்கரவாதிகள் தொடர்ந்தும் தண்டிக்கப்படாது தட்டிக்கொடுக்கப்பட்டால், நாட்டில் மீண்டும் பிறிதொரு நீண்ட கால உள்நாட்டு யுத்தம் ஒன்று ஆரம்பமாகும்.
சிறுபான்மையினருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இவ்வாறான வன்முறைகள் மற்றும் பயங்கரவாத, அடக்குமுறைகளை இந்த உலகமானது தொடர்ந்தும் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்பதற்கு சிறிலங்கா மட்டும் விதிவிலக்கல்ல. தனது சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை வழங்கத் தவறியதற்கான தண்டனையைப் பெற்றுக் கொள்வதிலிருந்து சிறிலங்கா தப்பிக்க முடியாது.
- தகவல் Gulf News ஊடகத்தின் சிறப்பு செய்தியாளர் Tariq A. Al Maeena / மொழியாக்கம்: நித்தியபாரதி.- புதிப்பலகை
நன்றி: http://lankamuslim.org/
தடைதாண்டி முன்னேறு
ஒரு ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கு சாதிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது. இதனால் அவன் பல வழிகளிலும் சாதித்து வந்தான். அவனது ஆவலும் தீராத வெற்றிப்பசியும் அவனுக்கு மேலும் வழிகளைத் திறந்துவிட்டது.
ஆனாலும் அவனிடம் ஒரு குறை இருந்தது. அவன் எச்செயலில் இறங்கினாலும் யாராவது அவனை கிண்டல் செய்தால் அல்லது குறை சொன்னால் அவன் இடையில் அச்செயலை கைவிடுவான். இது அவனி்ன் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக தோன்றியது.
ஒரு முறை அவனது ஊருக்கு ஒரு பெரியார் வந்திருந்தார். இவன் அப்பெரியாரைச்சந்தித்தான். தன்னை அறிமுகம் செய்து தனது பிரச்சினைகளை எடுத்துக்கூறினான். அப்பெரியார் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சிறிது நேரம் சிந்தித்தார். பிறகு ஒரு கேள்வி கேட்டார். "நீ எருமையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது கழுதையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது குதிரையாக இருக்க விரும்புகிறாயா?" இளைஞனுக்கு தூக்கிவாரிப்போட்டது.
"நீங்கள் என்னை கிண்டல் செய்கிறீர்களா?" என்று கேட்டான். அப்பெரியார் சிரித்தார். பிறகு கூறினார். "மகனே! எருமையானது எவரும் பின்னால் சென்று அதை தொந்தரவு செய்தால் அல்லது அடித்தால் என்ன செய்யும்? அதன் பாட்டில் இருக்கும். கழுதையானது அப்படி அடித்தவனை பின்னங்காலால் எட்டி உதைக்கும். ஆனால் குதிரையோ யாராவது அடித்தால் வீர முழக்கத்துடன் வேகமாக முன்னோக்கிப்பாய்ந்து செல்லும். இவற்றில் நீ எதை விரும்புகிறாய்?"
இப்போதுதான் இளைஞனுக்கு எல்லாம் புரிந்தது. "நான் எருமைபோல் ஒன்றும் விளங்காது வெறுமனே இருக்க விரும்பவில்லை. கழுதைபோல் மற்றவர்களை திருப்பி கிண்டல் செய்யவோ ஏசி நாட்களை வீணாக்கவோ விரும்பவில்லை. மற்றவரது கேலிகளையும் அவமானப்படுத்தல்களையும் எனக்கு கிடைத்த உத்வேகமாக பயன்படுத்தி குதிரைபோன்று வீர நடையுடன் என்றும் வெற்றியின் பாதையில் செல்வேன். இறைவன் உங்களுக்கு நற்நகூலி தருவானாக." என்று சொல்லி பெரியவர்க்கு நன்றி கூறி விடைபெற்றான்.
நன்றி: விடிவெள்ளிப்பத்திரிகையில் வெளியான ஒரு கதையின் தழுவல்.
வெற்றிக்கு வழி
நாம் எதிலும் வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் நம்மிடம் காணப்படவேண்டியது மன ஒருமையாகும். அதற்கு நம்மிடம் அவ்விடயத்தில் ஆர்வம் இருக்கவேண்டும். சகல விடயங்களும் நமக்குப்பிடித்தவையாக இருப்பதில்லை. ஆனாலும் செய்துதான் ஆக வேண்டும். தீர்வு என்ன? பிடிக்காததையும் பிடித்தவைகளாக மாற்றிக்கொள்வதுதான்.
பாடசாலை மாணவர்களைப்பாருங்கள்! அவர்களில் பலருக்கு படிப்பில் தான் தங்களின் கவனத்தைக் குவிக்க முடிவதில்லை. அதற்கு காரணம் என்ன? அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி முறைமை அவர்களுக்கு விருப்பமானதாய் இல்லாதிருப்பதுதான். அதில் கவனம் செலுத்த முடியாத மாணவர்கள் விளையாட்டு என்றால் தங்களையே மறந்து விடுவர். அவர்களின் மனம் முழுவதும் விளையாட்டை ஆக்கிரமித்து விடுகிறது. உடல் உறுப்புக்களும் தசை நார்களும் முறுக்கேறி விடுகின்றன. விளையாட்டுடன் அவர்கள் அப்படியே ஒன்றித்து விடுகிறார்கள்.
படிப்பில் கவனம் குவிவதில்லை. விளையாட்டில் கவனம் குவிகிறது. அவர்களுக்கு கல்வி பயிற்ற சிறந்த வழி எதுவெனில் அவர்களுக்குப் பிடித்தமானதை பயிற்றுவதும் பயிற்றப்படும் விடயத்தில் அவர்களை விருப்பங்கொள்ளச்செய்வதும் தான். இம் முறையே ரசியா போன்ற நாடுகளில் பின்பற்றப்பட்டு மக்களை மேன்மக்களாக்குகின்றனர்.
சிறுவனின் விருப்பம் எதில் உள்ளது என்பதைக் கண்டு கொண்டு அதுக்கேற்ற கல்வியை வழங்குகின்றனர். எனவேதான் கோள்களில் கூட கால் வைக்கும் அறிவியல் அறிஞர்கள் அங்கு உருவாகின்றனர். அவர்கள் விரும்பும் கல்வியைப்போதித்ததால் அடைந்த பெரும் பலன் இதுவாகும்.
எனவேதான் அறிஞர் ஒருவர் "ஆசிரியர்களின் வேலை மாணவர்களுக்கு பயிற்றுவிப்பது அல்ல. படிப்பில் பிரியம் உண்டாக்குவதேயாகும்" என்றார்.
சிலருக்கு படிப்பில் பிரியம் இல்லை. எந்த நேரம் பார்த்தாலும் ஓவியம் தீட்டுவதில் மூழ்கியிருப்பர். இவர்கள் தேர்வில் எப்போதும் தோல்வியடைவர். ஆனால் அவர்கள் ஓவியத்துறைக்கு திரும்பிவிட்டாலோ அவர்கள் ஒப்பாரும் மிக்காரும் இன்றி வெற்றிவாகை சூடுவர். காரணம் அவர்களுக்கு படிப்பில் பிரியமில்லை. அதனால் மனம் குவிவதில்லை. படம் தீட்டவேண்டும் என மனம் விரும்புகிறது. அதில் முழுதாய் ஈடுபடுகின்றனர்.
எனவே நாம் முதலில் செய்யவேண்டியது மனத்தை விரும்பிய ஒன்றில் செலுத்தவேண்டும். மனத்தை செலுத்தவேண்டிய விடயத்தை விரும்பவேண்டும். அப்போதே வெற்றி கிடைக்கும்.
நன்றி : அப்துற் றஹீம்(நூலாசிரியர்)
இஸ்லாத்திக்கு எதிராக செயற்படும் பிரிடிஷ்காரார்கள்?
இஸ்லாத்தின் எதிரிகள் ரஸூல்(ஸல்) அவர்களின் காலம்முதல் இன்றுவரை இஸ்லாத்தை அழிக்க முயன்றுவருகிறார்கள். தற்காலத்தில் கம்பியூ னிஸவாதிகள், கிறிஸ்தவர்கள்,யூதர்கள் போன்ற பலர் பல்வேறு திட்டங்களுடன் இஸ்லாத்திக்கு எதிராக செயற்படுகிறார்கள்.தந்திரவிளையாட்டுக்களில் ஈடுபட்டு,நேர்வழியைப் பின்பற்றும் அஹ்லுஸ்ஸூன்னாக்களின் மீது அவதூறுகள் கட்டவிழ்க்கும் முஸ்லிம்கள் என்ற போர்வையில் வாழும் நயவஞ்சகர்கள்,மேற்குறிப்பிட்ட இஸ்லாத்தின் எதிரிகளோடு ஒன்றாக செயற்படுபவர்களே!,இவர்கள் அஹ்லுஸூன்னாவை அழிப்பவர்கள் ஆகும்.
இவ்வாறு தூய இஸ்லாத்தை பிரிவடையச்செய்ய முன்னோடியாகாக இருந்தவர்கள் பிரிடீஷ்காரர்களே!, இப்பிரிடிஷ்காரர்கள், இஸ்லாத்தில் பிளவுகளை ஏற்படுத்தி இஸ்லாத்தை அழிப்பதற்காக அவர்களின் வளங்களை,பணங்களை, தொழிநுட்பத்தை, அரசியல்வாதிகளை, எழுத்தாளர்களைப் பயன்படுத்துகின்றனர்.
உதுமானிய கிலாபத் காலப்பகுதியில்,இஸ்லாத்திக்கு எதிராகச்செயற்படுவதற்கு பொதுநலவாய அமைச்சு என்பதை உருவாக்கி,அதிலிருந்து இஸ்லாத்திக்கு எதிராகச்செயற்பட பல ஆண்,பெண்களை பயிற்றுவித்து உலகின் பல்வேறு இடங்களிக்கு அனுப்பினார்கள்,இவ்வாறு சென்றவர்கள் முஸ்லிம்களிடம் உள்ள பலவீனங்களை அறிந்து,இஸ்லாத்தில் கொள்கைரீதியான பிளவுகளை ஏற்படுத்தினர்.இதனால் அஹ்லுஸூன்னாவுக்கு மாற்றமான புதியகொள்கைள் பரவின.இம்மார்க்க ரீதியான பிளவே உஸ்மானியகிலாபத்தின் வீழ்ச்சிக்கு அடிபப்படைக்காரணமாக அமைந்தது.
ஒரு சமுகம் தனது கடந்தகாலவரலாற்றைக்கற்கும் போது அது தன்பழங்கால பெருமைகளை உணர்ந்துபுத்துணர்வும்,எழிச்சியும் பெறமுடியும் என்பது மட்டுமன்றி, நிகழ்காலப்பிரச்சினைகளிக்குத் தேவையான படிப்பினைகளைப் பெறமுடியும். என்பதற்கு இணங்க நாம் எமது வரலாற்றை சரியான முறையில் படித்து,தெளிவான விளக்கங்களை(,படிப்பினைகளை) பெறமுயற்சிப்போம்.
கஹட்டோவிட்ட வரலாறு
அறிமுகம்
மேல் மாகாணத்தில், கம்பஹா மாவட்டத்தில், அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள, நூற்றுக்கு நூறு முஸ்லிம்களைக் கொண்ட கிராமமே கஹட்டோவிட்ட. இது, நிட்டம்புவ - வல்கம்முல்ல ஊடான கிரிந்திவல(185) பாதையில், நிட்டம்புவ நகரில் இருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. கஹட்டோவிட்டாவின் ஓர் எல்லையாக ஓடுகின்ற 'அத்தனகலு ஓயா', இதன் அழகுக்கும் பசுமைக்கும் இன்னும் வலிமை சேர்க்கின்றது.இலங்கையில், முஸ்லிம்களை மாத்திரம் உள்ளடக்கிய ஒரு சில ஊர்களில் இதுவும் ஒன்றாக இருப்பது இதன் ஒரு சிறப்பம்சமாகும். நாடளாவிய ரீதியில்,கல்வி, உயர் அரச பதவிகள், மார்க்க அனுஷ்டானங்கள், அரசியல் போன்ற பல்வேறு காரணிகளால் ஓரளவு பிரபல்யமடைந்த ஊராக கஹட்டோவிட்ட காணப்படுகின்றது. இதன் தற்போதைய சனத்தொகை சுமார் 6000.
பெயரும் காரணமும்
பெயரும் காரணமும்
,
கஹட்டோவிட்ட என்ற பெயர் எவ்வாறு வந்தது என்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அவற்றில் மிகவும் பொருத்தமானதாக பின்வரும் தகவலைக் குறிப்பிடலாம்.
,
இந்த ஊரின் எல்லையூடாகச் செல்லும் அத்தனகலு ஓயாவின் கரையில் அக்காலம் தேயிலைச் செடிகள் காணப்பட்டன. ஆற்றோரம் என்பதற்கு சிங்களத்தில் 'ஒயிட்டி' என்றும், தேயிலைக்கு 'கஹட்ட' என்றும் வழங்குவதன் காரணமாக, 'கஹட்ட' மற்றும் 'ஒயிட்டி' ஆகிய இரண்டையும் இணைத்து, 'கஹட்டோவிட்டி'( கஷ்டோவிட்டி)என்று அழைக்கப்பட்டு, பின்னர் மருவி, 'கஹட்டோவிட்ட' என்ற பெயர் பெற்றதாகக் குறிப்பிடப்படுகின்றது. அண்மைக்காலம் வரை இவ்வூரின் சில பகுதிகளில் தேயிலைச் செடிகள் இருந்ததற்கான தக்க சான்றுகள் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது 'மஸ்ஜித் ஜாமிஉ'அமைந்துள்ள காணிக்கு எதிரே, வீதியின் மறுபக்கமாக இருந்த காணிகள், 1960 களில் கூட, 'தேயிலைத் தோட்டம்' என அழைக்கப் பட்டமை இதற்கு சிறந்த சான்றாகும்.
கஹட்டோவிட்ட 400 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட ஒரு புராதன கிராமம். கஹட்டோவிட்ட கிராமத்துக்கு முஸ்லிம்கள் எவ்வாறு, எங்கிருந்து வந்தார்கள் என்பதற்கு இரு வகையான தகவல்கள் கூறப்படுகின்றன.
முதலாவது தகவல்:- கிறிஸ்துவுக்கு முன்னரே அறேபியர் வர்த்தக நோக்கில் இலங்கைக்கு வந்துபோனதாக நிறைய சான்றுகள் உள்ளன. அத்துடன் கி.பி. 8ம் நூற்றாண்டுகளில் அறேபிய வம்சாவழியிலான முஸ்லிம் குடியேற்றங்கள் பேருவலை, காலி, அட்டுலுகம போன்ற கரையோரப் பிரதேசங்களில் காணப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இலங்கைக்கு ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர் கரையோரங்களில் குடியேறிய முஸ்லிம்கள்,இலங்கையின் வர்த்தகத்தில் தனியான இடத்தைப் பெற்றிருந்தனர். ஆயினும் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது முஸ்லிம்களின் வர்த்தகத்தைத் திட்டமிட்டு அழித்து, அவர்களை விரட்டிவிட்டு, வர்த்தக மேலாதிக்கத்தை தாம் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டனர். சீதாவக்கை இராச்சியத்தை ஆண்ட மாயாதுன்ன அரசன் முஸ்லிம்களுக்கு உதவிபுரிய முன்வந்தாலும், கோட்டை இராச்சியத்தை ஆண்ட 7ம் புவனேகபாகு, போர்த்துக்கேயரின் வேண்டுகோளின் படி, முஸ்லிம்களைக் கரையோரங்களில் இருந்து துரத்தினான்.போர்த்துக்கேயரின் இந்நடவடிக்கைகளால் நாட்டின் உட்பகுதிக்குச் சென்ற முஸ்லிம்கள், நீர்நிலைகளை அண்டிய பிரதேசங்களில் குடியமர்ந்தனர். இதன் காரணமாகவே இன்றும் முஸ்லிம்கள் நாடளாவிய ரீதியில் சிதறி வாழ்கின்றனர்.
போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில், அவர்களின் பிரதான ஒரு தளமாக மல்வானை காணப்பட்டது. இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை போர்த்துக்கேயரிடம் கையளிப்பதற்கான அல்லது எமது நாடு இன்னொரு நாட்டின் ஆளுகைக்கு உட்படுவதற்கான முதலாவது ஒப்பந்தம்,மல்வானையிலேயே நடந்தது. இதனால் இவ்வொப்பந்தம் 'மல்வானை ஒப்பந்தம்'என்றும் அழைக்கப்படுகின்றது.
போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து துரத்துவதற்கு, சீதாவக்கை மன்னன் மாயாதுன்ன, தன் மகன் இராஜசிங்கனின் தலைமையில் முல்லேரியா போரை நடத்தினான். 1562 இல் இடம்பெற்ற இப்போரின் போது, மல்வானை பகுதியில் இருந்த முஸ்லிம்கள் இராஜசிங்கனுக்கு உதவியதால், அங்கிருந்த முஸ்லிம்களைப் போர்த்துக்கேயர்கள் இம்சைப்படுத்தினர். இதனால் அப்பிரதேசத்தை விட்டு பல முஸ்லிம்கள், களனி ஆறு வழியே ஹங்வெல்ல,பூகொட பிரதேசங்களுக்கு வந்து, பின்னர் கஹட்டோவிட்ட, திஹாரிய போன்ற இடங்களில் வந்து குடியேரியனர். இது 'கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு' என்ற ஆய்வு நூலில் இடம்பெற்றுள்ளது.
கஹட்டோவிட்டாவுக்கு முஸ்லிம்களின் வருகை பற்றிய அடுத்த தகவல் இவ்வாறு அமைந்துள்ளது.
இரண்டாவது தகவல்:-மலையாளத்திலிருந்து இடம்பெயர்ந்து, அத்தனகல்ல,பண்டாரஓவிட்ட என்ற இடத்துக்கு வந்திருந்த ஷேக் அப்துல் காதர் மற்றும் அவரது தோழர்களை சந்திக்க, அட்டுலுகமவிலிருந்து முஹம்மத் காஸிம் என்பவர் அடிக்கடி வந்துள்ளார். முஹம்மத் காஸிம், பல்துறை சார்ந்த ஒரு திறமைசாலியாக இருந்ததாகவும், இச்சந்தர்ப்பத்தில் அவ்வழியே வந்த சிங்கள மன்னன் ஒருவன் இவரது திறமைகளைக் கண்டு இப்பிரதேசத்தை அன்பளிப்பாக வழங்கியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்நிகழ்வின் பின்னர்,கஹட்டோவிட்ட பிரதேசம் முஸ்லிம்களின் குடியிருப்பாக மாறி, பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் இங்கு வந்து குடியமர்ந்தனர்.
சன்மார்க்க எழுச்சி
கஹட்டோவிட்டாவின் மார்க்க எழுச்சி வரலாறு பற்றிக் குறிப்பிடும் போது இருவரின் பங்களிப்புகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.இவ்விருவரும் அறபு நாடுகளிலிருந்து சன்மார்க்க போதனைக்காக கஹட்டோவிட்டாவுக்கு வந்துள்ளனர். 1700 களின் பிற்பகுதியில் ஷெய்க் பாதிப் மவ்லானா (யமனி) அவர்களும், ஷெய்க் முபாரக் மவ்லானா அவர்களும் வருகை தந்து, ஊரின் மார்க்க எழுச்சியில் பெரிதும் பங்காற்றியுள்ளனர். ஷெய்க் முபாரக் மவ்லானா இங்கு நீண்டகாலம் தங்கியிருக்காவிட்டாலும், ஷெயக் பாதிப் மவ்லானா அவர்கள் தாம் மரணிக்கும் வரை இங்கு தங்கியிருந்து மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் இருவரினதும் போதனைகளை நடைமுறைப்படுத்த இரு தக்கியாக்களும் கட்டப்பட்டன.
இதன் பின்னர் 1792 இல், இப்பிரதேசத்தின் முதல் பள்ளிவாயல்,கஹட்டோவிட்டாவுக்கும் உடுகொடைக்கும் இடையிலிருந்த கொடல்ல எனும் இடத்தில் கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. இது மோதரான அப்பா அவர்களின் காணியில், சின்ன லெப்பை சுலைமான் லெப்பபை அவர்களின் தலைமையில் கட்டப்பட்டது.
தற்போதுள்ள முஹியத்தீன் பள்ளிவாசல், கறுத்த ஆலிம் அப்பா அவர்களின் வழிகாட்டலில், 1795 இல் அத்தனகல்லையிலிருந்து குடியேறிய அஹமது லெப்பையால் வழங்கப்பட்ட காணியில் கட்டப்பட்டது. இவரே இப்பள்ளியின் முதல் கதீபும் ஆவார். கஹட்டோவிட்ட ஜும்ஆ மஸ்;ஜித் என்றழைக்கப்பட்ட இப்பள்ளிவாசல், 1970 இல், முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் எனப் பெயர் பெற்றது.
இதன் பின்னர் இரண்டாவது பள்ளிவாசலாக, 1974 இல், மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் ஆரம்பிக்கப் பட்டது. புஹாரி ஆலிம் என்பவருக்குச் சொந்தமான கட்டடமொன்றில் இயங்கி வந்த குர்ஆன் மத்ரஸாவே இவ்வாறு பள்ளிவாசலாக மாற்றம் பெற்றது.
தற்போது, 2000 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மஸ்ஜித் ஜாமிஉ ஜும்ஆ பள்ளி அடங்கலாக மொத்தம் மூன்று ஜும்ஆ பள்ளிவாசல்கள் கஹட்டோவிட்ட கிராமத்தில் உள்ளன.
கல்வி
ஆரம்பத்தில் கல்வி நடவடிக்கைகள் பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டே இயங்கி வந்தன. இதன் அடிப்படையில், முஹியத்தீன் பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள, பாதிபிய்யா தக்கியாவுக்கு சொந்தமான கட்டடத்திலேயே முதலாவது பாடசாலை அமைந்திருந்தது. பின்னர், 1920 இல், அரசினர் பாடசாலையாக இது மாற்றம் பெற்றது. இதன் பின்னர், இப்பாடசாலை,தற்போதைய அமைவிடத்துக்கு மாற்றப்பட்டு, இப்போது அல்பத்ரியா ம.வி. என்ற பெயரில் இயங்கி வருகின்றது.
அடுத்து, பெண்களுக்கான தனியான பாடசாலை 1946 இல் ஆரம்பிக்கப்பட்டது.இன்று ஒரு தனியார் சர்வதேசப் பாடசாலை அடங்கலாக மொத்தம் மூன்று பாடசாலைகள் செயற்பட்டு வருகின்றன.
கஹட்டோவிட்ட, சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களோடு ஒப்பிடும் போது,கல்விமட்டத்தில் மிகச் சிறந்த நிலையில் அன்றும் இன்றும் இருந்து வருகின்றது.உதவித் தேர்தல் ஆணையாளர், உதவிப் பரீட்சை ஆணையாளர் போன்ற உயர் அரச பதவிகளிலும் மற்றும் மருத்துவம், பொறியியல், சட்டம், ஊடகத்துறை போன்ற பல்வேறு துறைகளிலும் அதிகமானோர் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் முதல் இன்று வரை மார்க்கத் துறையிலும் பலர் பல்வேறு இயக்கங்களில் இருந்து தொண்டாற்றி வருகின்றனர்.
இவை தவிர 1959 ஆம் ஆண்டிலே கஹட்டோவிட்டாவுக்கான தனியான உபதபாற்கந்தோர் திறந்துவைக்கப்பட்டது. இங்கு 1981 இல் மின்சார இணைப்பும் வழங்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் கண்ட ஒரு தனித்துவ அடையாளத்தைப் பிரதிபலிக்கும், கட்டுக்கோப்பான சமுக அமைப்பைக் கொண்ட ஒரு ஊராக கஹட்டோவிட்ட திகழ்ந்து வருகின்றது.
Subscribe to:
Posts (Atom)




